எட்டயபுரம் அருகே பைக் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு!

எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (49). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
எட்டயபுரம் அருகே காரியாபட்டியை அடுத்த எஸ்.கல்லுபட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, அங்கு சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயகுமாரை சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இறந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உடல் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு விஜயகுமார் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதிவாணன் (அருப்புக்கோட்டை), அசோகன் (விளாத்திகுளம்), எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அங்குள்ள மயானத்தில் தூத்துக்குடி ஆயுதப்படை போலீசார் 21 குண்டுகள் முழங்க விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாருக்கு கற்பகவள்ளி (43) என்ற மனைவியும், அருண்குமார், ஆதித்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.