வல்லநாடு துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் பரபரப்பு: அங்கீகாரம் ரத்து... 36 மாணவிகளின் வழக்கறிஞர் கனவு கேள்விக்குறி! ஹால் டிக்கெட் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டம்..!

வல்லநாடு துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் பரபரப்பு: அங்கீகாரம் ரத்து... 36 மாணவிகளின் வழக்கறிஞர் கனவு கேள்விக்குறி! ஹால் டிக்கெட் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டம்..!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே செயல்பட்டு வந்த துளசி மகளிர் சட்டக் கல்லூரியின் அங்கீகாரம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பயிலும் 36 மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவிகள், தற்போது தேர்வு எழுத முடியாத சூழலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே கஸ்பா பகுதியில் அமைந்துள்ள துளசி மகளிர் சட்டக் கல்லூரி, கடந்த நவம்பர் 3, 2022 அன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பின் கீழ் செயல்பட்டு வந்த இந்தக் கல்லூரியில் 3 ஆண்டு எல்.எல்.பி. மற்றும் 5 ஆண்டு பி.ஏ. எல்.எல்.பி. சட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இந்தக் கல்லூரியில் சுமார் 350 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அனுமதி 60 பேருக்கு... சேர்க்கை 96 பேர்!

2025–2026 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் 60 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், கல்லூரி நிர்வாகம் விதிமுறைகளை மீறி மேலும் 36 மாணவிகளை கூடுதலாக சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பல்கலைக்கழகம் விசாரணை மேற்கொண்டு, விதிமீறல்கள் மற்றும் நிர்வாக குறைபாடுகள் காரணமாக கல்லூரியின் அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை அனுமதியை ரத்து செய்தது.

முழு கட்டணம் வசூல்... தேர்வு எழுத அனுமதி இல்லை

மாணவிகளிடம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே முழு கல்விக் கட்டணமும் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழகம் அனுமதிக்கப்பட்ட 60 மாணவர்களுக்கு மட்டும் ஹால் டிக்கெட் வழங்கி தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள 36 மாணவிகள் கடந்த ஓராண்டாக எந்தத் தேர்வையும் எழுத முடியாமல், வகுப்புகளில் மட்டும் பங்கேற்று வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இரண்டாம் ஆண்டு தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், இதுவரை 36 மாணவிகளுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்படாததால் அவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

"விருப்பம் இருந்தால் படியுங்கள்... இல்லையெனில் சான்றிதழை வாங்கிச் செல்லுங்கள்"

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் தொடர்ந்து முறையிட்டபோது, உரிய தீர்வு வழங்காமல், "விருப்பம் இருந்தால் கல்லூரியில் படியுங்கள்; இல்லையெனில் சான்றிதழை பெற்றுக்கொண்டு செல்லுங்கள்" என அலட்சியமாகவும், மரியாதைக்குறைவாகவும் பேசியதாக மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த 36 மாணவிகளும் செவ்வாய்க்கிழமை காலை முதல் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"எங்கள் வழக்கறிஞர் கனவை காப்பாற்றுங்கள்"

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் கூறுகையில்,

«"வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் இந்தக் கல்லூரியில் சேர்ந்தோம். எங்களிடம் முழு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஆனால் இன்று தேர்வு எழுதும் உரிமையே மறுக்கப்பட்டுள்ளது. எங்களது ஒரு ஆண்டு கல்வி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் எதிர்காலத்தை காப்பாற்ற பல்கலைக்கழகமும் தமிழக அரசும் உடனடியாக தலையிட வேண்டும்" என்றனர்.»

350 மாணவிகளின் எதிர்காலமும் கேள்விக்குறி

தற்போது துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் சுமார் 350 மாணவிகள் பல்வேறு ஆண்டுகளில் பயின்று வருகின்றனர். கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பல்கலைக்கழகத் தேர்வுகளை இந்தக் கல்லூரியில் பயிலும் அனைத்து 350 மாணவிகளும் எழுத முடியாத நிலை உருவாகும் அபாயம் இருப்பதாக மாணவிகளும், பெற்றோர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், தற்போது ஹால் டிக்கெட் பெறாத 36 மாணவிகள் மட்டுமல்லாமல், கல்லூரியில் கல்வி பயிலும் அனைத்து மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்காலமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேண்டும் என்ற இலக்குடன் படித்து வரும் மாணவிகளின் கனவு, கல்லூரி நிர்வாகத்தின் விதிமீறல்களால் சிதைந்து விடக்கூடாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் (SFI) தூத்துக்குடி மாவட்டக் குழுவும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் மாடசாமி, மாவட்ட செயலாளர் ராம் குமார் கூறுகையில் 

- விதிமுறைகளை மீறி கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்திய துளசி சட்டக் கல்லூரி நிர்வாகம் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மாணவிகளிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டண முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

- பாதிக்கப்பட்ட 36 மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமும் தமிழக அரசும் உடனடியாக தலையிட வேண்டும்.

- மாணவிகளுக்கு உரிய முறையில் தேர்வு எழுத அனுமதி வழங்கி, அவர்கள் தொடர்ந்து சட்டப் படிப்பை மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

- மேலும், கல்லூரியில் பயிலும் 350 மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் உடனடி மாற்று ஏற்பாடுகளை செய்து, அனைவரும் நவம்பர் மாத பல்கலைக்கழகத் தேர்வில் பங்கேற்கும் வகையில் அரசு மற்றும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டுள்ளது.

36 மாணவிகளின் எதிர்காலம் என்ன?

ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாக முறைகேடால், எந்தத் தவறும் செய்யாத மாணவிகள் இன்று தங்களது கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து அச்சத்தில் உள்ளனர். வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் சட்டப் படிப்பில் சேர்ந்த 36 மாணவிகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் கல்லூரியில் பயிலும் சுமார் 350 மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்காலமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் மனிதநேய அடிப்படையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே மாணவிகள், பெற்றோர்கள்

மற்றும் கல்வியாளர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.