கேஸ் கம்பெனி டிரைவர் குடும்பத்திற்கு நிவாரணம் : சிஐடியு தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

கேஸ் கம்பெனி டிரைவர் குடும்பத்திற்கு நிவாரணம் : சிஐடியு தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

தூத்துக்குடியில் சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு, தொழிற்சங்க நிர்வாகிகள் பேர்ச்சவார்த்தையை தொடர்ந்து நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் பாரத் பெட்ரோலியம் சார்பில் சமையல் எரிவாயு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு டிரைவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு தேனி மாவட்டம் போடியை சேர்ந்த தினகரன் என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஓய்வெடுக்கும் அறையில் படுத்திருக்கும் போது திடீரென மரணம் அடைந்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது உடலை சிப்காட் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தினகரன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை  அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த நிறுவன வளாகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் பாரத் பெட்ரோலியம் நிர்வாக இயக்குனர் (டெரிட்டேரி மேனேஜர்) பிளாண்ட் மேனேஜர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உயிரிழந்த தினகரன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காசோலையும் இன்சூரன்ஸ் மூலம் பெருந்தொகை மற்றும் தினகரன் மகள் படிப்புக்கான உதவி உள்ளிட்ட நிவாரணம் வழங்கப்பட்டது.

இதில், பாரத் பெட்ரோலியம் சிஐடியு தொழிற்சங்க பொதுச் செயலாளர் லேனர்ஸ், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் வயனபெருமாள், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆதிமூலம், அக்பர், டான்விஸ், வசந்தகுமார், சேவியர், வைரமூர்த்தி, பிரபு, முத்துக்குமார், ஐயப்ப நயினார் மாரிச்செல்வம்,விக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.