இளைஞர்களுக்கு மாதாந்திர வருமானம் கிடைக்க கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 அறிமுகம்!

இளைஞர்களுக்கு மாதாந்திர வருமானம் கிடைக்க கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 அறிமுகம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு மாதந்திர வருமானம் கிடைக்கும் வகையில், கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தீன்தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டமானது 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, அவர்களுக்கு நிரந்தரமான மாதாந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்று தருவதை குறிக்கோளாக கொண்டு 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மத்திய அரசு 60 சதவீதம், தமிழக அரசு 40 சதவீதம் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் 2.0 புதிய வடிவம் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம் நீங்கலாக 37 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் ஊரக பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் 40 தொழில் பிரிவுகளில் குறுகியகால பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சிக்கு பின் உரிய வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. பயிற்சி வழங்குவதற்காக 38 பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.

பயிற்சி காலம் மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும். பயிற்சி காலத்தில் சீருடை, உணவு, தங்கும் இடம் வசதி, பாட புத்தகங்கள். ஆகிய அனைத்தும் எவ்வித கட்டணமும் இன்றி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

இதுதவிர பயிற்சி முடித்த இளைஞர்களில் குறைந்தது 50 சதவீதம் பேருக்கு கட்டாய பணியமர்வும், 20 சதவீதம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான உதவியும் வழங்கப்படும். பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவுடன் மாதம் ரூ.1.270 வீதம் ஆறு மாதங்களுக்கு ஊக்கத் தொகையும் பயிற்சியாளருக்கு வழங்கப்படும். மேலும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 25 சதவீதம், மலைவாழ் பிரிவினருக்கு 2 சதவீதம், சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் மற்றும் பெண்களுக்கு 39 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

எனவே விருப்பம் உள்ள இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் அலுவலகத்தை அணுகியோ அல்லது 155330 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ பயிற்சி குறித்த தகவல்களை பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.