போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம்..? மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை!

ஈரோடு போலீஸ் விசாரணையில் இறந்ததாக கூறப்படும் தூத்துக்குடியை சேர்ந்த வாலிபரின் உடல் கோர்ட்டு உத்தரவின்படி டீன், மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அகரம் பகுதியை சேர்ந்தவர் மையது. இவரது மகன் பாலகிருஷ்ணன் (36) பெயிண்டர் வேலைசெய்து வந்தார். மேலும் இவர் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழிலும் செய்து வந்தார். இந்தநிலையில் இவர் கடந்த மாதம் 27-ந் தேதி ஈரோட்டை சேர்ந்த ஒருவரிடம் கார் ஒன்றை ஒப்படைக்க தனது நண்பர்களுடன் அங்கு சென்றார்.
பின்னர் அவர் அங்கு உள்ள பழையபாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான பாருக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஈரோட்டை சேர்ந்த தனிப்படை போலீசார் பாலகிருஷ்ணன் அவருடைய நண்பர்கள் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேரை சந்தேகத்தின்பேரில் அழைத்து சென்றனர். இவர்களை பெருந்துறையில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பாலகிருஷ்ணனுக்கு கடந்த 28-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 2-ந் தேதி மாலை 3.35 மணியளவில் உயிரிழந்தார். பாலகிருஷ்ணனின் உடலில் பல இடங்களில் காயம் உள்ளது. எனவே அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக அவரது அண்ணன் மாரியப்பன் என்பவர், தனது தம்பியை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதில் இறந்ததாகவும், எனது கோரிக்கை மனுவை விசாரிக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்றும், டாஸ்மாக் பாரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்கவும், பிரேதபரிசோதனையை வேறு அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் பாலகிருஷ்ணனின் உடலை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று டீன் மற்றும் உள்ளூர் மாஜிஸ்திரேட்டு மேற்பார்வையில் பிரேதபரிசோதனை செய்ய வேண்டும், முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கோர்ட்டு உத்தரவையடுத்து பாலகிருஷ்ணனின் உடல் நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் பெருந்துறை பொறுப்பு நீதிபதியும், ஈரோடு ஜே.எம்.-1 வது விரைவு கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முனிகுமார் முன்னிலையில் கோவை அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) சிவக்குமார் மேற்பார்வையில் டாக்டர் ஜெயசீலன் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனையானது வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பாலகிருஷ்ணனின் உடலில் 8 இடங்களில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. அவரின் உடலில் இருந்த காயங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.