6 இலக்க எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் வெடிக்கும்” – தூத்துக்குடியில் பரவும் வாட்ஸ்அப் ஆடியோ பொய் : மாவட்ட காவல்துறை மறுப்பு

6 இலக்க எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் வெடிக்கும்” – தூத்துக்குடியில் பரவும் வாட்ஸ்அப் ஆடியோ பொய் : மாவட்ட காவல்துறை மறுப்பு

வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து 5 அல்லது 6 இலக்க எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், அந்த அழைப்பை ஏற்றால் செல்போன் வெடித்து விடும் எனவும், தூத்துக்குடியில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறி பரவி வரும் ஒரு வாட்ஸ்அப் ஆடியோ குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரபூர்வ மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில்,

“ஹலோ… நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன். கஸ்டமர் காலில் 5 அல்லது 6 நம்பரிலிருந்து அழைப்பு வருது. அதை அட்டெண்ட் பண்ணினால் பிளாஸ்ட் ஆகி செல்போன் வெடிக்கும். தூத்துக்குடியில் 27 பேர் செத்துட்டாங்க. இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க”

எனும் உள்ளடக்கத்துடன் ஒரு ஆடியோ வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தற்போது பரவி வரும் ஆடியோ பழையதும், முற்றிலும் பொய்யான தகவல்களைக் கொண்டதும் எனவும், அந்த ஆடியோவை சிலர் மீண்டும் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வாட்ஸ்அப் ஆடியோ குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், சமூக நலன் கருதி அந்த ஆடியோவை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலோ தவறான தகவல்களை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும்,

மேற்படி பொய்யான ஆடியோவை தொடர்ந்து பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.