தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: பரதர் குல ஒருங்கிணைப்பு குழு பேட்டி!

தூத்துக்குடி மாநகரை கிழக்கு மற்றும் மேற்கு எனப் பிரித்து, கிழக்கு தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று பரத குல உயர்மட்ட  ஒருங்கிணைப்பு குழு தலைவர் சேசையா வில்லவராயர் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற பரதகுல உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து சமூகத்தின் தலைவர் சேசையா வில்லவராயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹெர்மன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பரதகுல மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.

மீனவர் வாக்குகள் அதிகமாக உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், ராதாபுரம், குளச்சல் தொகுதிகளில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தூத்துக்குடி மாநகரை கிழக்கு மற்றும் மேற்கு எனப் பிரித்து, மீனவர்கள் அதிகம் வசிக்கும் தூத்துக்குடி கிழக்கு தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்.

தமிழகத்தில் மீனவர்களுக்கு எனத் தனித் தொகுதி (Reserved Constituency) ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அரசியல் ஆதரவு: எந்தக் கட்சி மீனவர் சமுதாயத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு வழங்குகிறதோ, அந்தக் கட்சிக்குத் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் ஆதரவளிப்பார்கள்.

1996-ல் திருச்செந்தூர் தொகுதியில் ஜெனிபர் சந்திரன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் போல, தற்போதும் தொடர்ச்சியாகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே இக்குழுவின் கருத்தாக உள்ளது. பல ஆண்டுகளாகத் தங்கள் சமூகம் அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்படுவது வேதனை தருகிறது. ஆதியிலிருந்து பழங்குடியினராக இருக்கக்கூடிய மீனவர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.