தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15வரை அவகாசம் : ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் மே 15குள் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (09.04.2025), தொழிலாளர் துறை சார்பில், மாவட்டத்தில் இயங்கிவரும் கடைகள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948ல் விதி 15-ன்படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும்.
இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம், 1958 மற்றும் விதிகள் 1959ல் விதி 42(பி)-ன்படியும் வைத்திருக்க வேண்டும். தொழிற்சாலைகள் சட்டம், 1948 மற்றும் விதிகள் 1950 விதி 113-ன்படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர்பலகை வைக்கப்படலாம்.
மேலும், இந்த பெயர் பலகையானது 5:3:2 என்ற விகிதாசாரப்படி அமைக்கப்பட வேண்டும். தமிழில் முதன்மையாக வைக்கப்பட வேண்டும். பிற மொழிகள் தேவைப்படும்பட்சத்தில் ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும், பின்னர் பிற மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு, அனைத்து தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் உறுப்பினராக உள்ளனர்.
இக்குழு அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி 2025 மே 15குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும், 2025 மே 15குள் தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
எனவே, அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகள் சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ் பெயர் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன் அபராதத்தை தவிர்க்கவும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மின்னல்கொடி, குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.