மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் அஞ்சலி!!

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் அஞ்சலி!!

சென்னை சாலிகிராமத்திலுள்ள மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளும், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த குமரி அனந்தனின் மகளும், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி ஆறுதல் கூறினார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானார்.

இதையறிந்த கனிமொழி கருணாநிதி எம்.பி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில், காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவரும், தமிழ் அறிஞருமான ஐயா குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். தலைவர் கலைஞர் மீதும், தளபதி மீதும் பேரன்பு கொண்டவர். என்னுடன் எப்போதும் மிகுந்த பாசத்துடன் பழகக் கூடியவர். 

குறிப்பாக காந்தியடிகள் மற்றும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மீது தீராப்பற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் கேள்வியெழுப்பும் உரிமையைப் பெற்றுத்தந்த தமிழுரிமைப் போராளி. அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு.

இத்துயர்மிகு வேளையில் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.