திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா!

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா!

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. 

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவின் 7-ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரானையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து உருகு சட்ட சேவை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு சுவாமி அம்பாள்களுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. 

 

தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். 

 

 7-ம் திருநாளை முன்னிட்டு நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பச்சை சாத்தி இன்று (சனிக்கிழமை) 8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளுடை அணிந்து, வெண்நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். தேரோட்டம் 10-ம் திருநாள் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 

 

விநாயகர், சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி அம்பாளுடன், தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றம் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.