திருச்செந்தூர் வைகாசி விசாகம் 2026: தேதி, விழா விவரம், சிறப்பு ரயில் கோரிக்கை – முழு தகவல்!

திருச்செந்தூர் வைகாசி விசாகம் 2026: தேதி, விழா விவரம், சிறப்பு ரயில் கோரிக்கை – முழு தகவல்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத் திருவிழா வரும் மே 30, 2026 (சனிக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.

முருகனின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத்தையொட்டி, மே 21 முதல் மே 30 வரை பத்து நாட்கள் வசந்தோத்சவம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முனி குமார்களுக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி, மே 30 மாலை 6 மணியளவில் நடைபெறும். இதைக் காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என்பதால், அன்று அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்படும்.

ரயில்வே துறைக்குக் கோரிக்கைகள்: இத்திருவிழாவிற்குத் திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது போதிய நேரடி ரயில் வசதி இல்லாததால், பயணிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதனைத் தவிர்க்க கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

1. திருவனந்தபுரம் - திருச்செந்தூர் சிறப்பு ரயில்:

திருவனந்தபுரத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலை (வண்டி எண்: 56311) வைகாசி விசாகத்தன்று திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

2. இரவு நேர ரயில் வசதி:

கோவில் நடை அதிகாலை 1 மணிக்குத் திறக்கப்படுவதால், பக்தர்கள் 1:30 மணி தீபாராதனையில் கலந்துகொள்ளும் வகையில், திருவனந்தபுரத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயிலை (வண்டி எண்: 56308) நாகர்கோவில் டவுன் வழியாகத் திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

3. பிற மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்கள்:

மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வழக்கம் போலத் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே மட்டும் சிறப்பு ரயில்களை இயக்காமல், கீழ்க்கண்ட வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது:

கொல்லம் - செங்கோட்டை - திருநெல்வேலி - திருச்செந்தூர்: கேரளா வாழ் தமிழர்களின் வசதிக்காக.

மதுரை - திருச்செந்தூர்: தென் மாவட்ட பக்தர்களுக்காக.

பழநி - திருச்செந்தூர் மற்றும் திருத்தணி - திருச்செந்தூர்: அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில்.

கோயம்புத்தூர் - திருச்செந்தூர்: கொங்கு மண்டல பயணிகளுக்காக.

தற்போது பக்தர்கள் பேருந்துகளையே அதிகம் சார்ந்துள்ள நிலையில், இந்தச் சிறப்பு ரயில்களை இயக்கினால் நெரிசலைக் குறைப்பதோடு பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் எனப் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.