தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தீவிபத்தில் 2 யூனிட்டுகள் சேதம்: ரூ.264 கோடியில் புதுப்பிக்க அனுமதி!

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தீவிபத்தில் 2 யூனிட்டுகள் சேதம்: ரூ.264 கோடியில் புதுப்பிக்க அனுமதி!

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தீவிபத்தில் 2 யூனிட்டுகள் சேதம்: ரூ.264 கோடியில் புதுப்பிக்க அனுமதி!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீவிபத்தில் சேதம் அடைந்த 2 யூனிட்டுகளை ரூ.264 கோடி செலவில் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. முதல் மின்உற்பத்தி எந்திரம் 1979-ம் ஆண்டும், 2-வது எந்திரம் 1980-ம் ஆண்டும், 1982-ல் 3-வது எந்திரமும், 1990-ல் 4-வது எந்திரமும், 1992-ல் 5-வது எந்திரமும் செயல்பட தொடங்கியது. சுமார் 45 ஆண்டுகள் பழமையான எந்திரங்கள் மூலம் மின்சார உற்பத்தி முழுவீச்சில் நடந்து வந்தது.

கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி இரவு சுமார் 11 மணி அளவில் 1, 2-வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் உள்ள மின்சார ஒயர்களில் தீப்பிடித்து எரிந்தது. இதைத் தொடர்ந்து சுமார் 18 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் பல கோடி மதிப்பிலான கேபிள்கள் எரிந்து சேதம் அடைந்து இருப்பது தெரியவந்தது. 1, 2-வது மின்உற்பத்தி எந்திரம் முழுமையாக சேதம் அடைந்தது.

3-வது மின் உற்பத்தி எந்திரத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3-வது மின்உற்பத்தி எந்திரம் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கியது. மேலும் அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பிஜான் வர்க்கீஸ், சேதம் அடைந்த 1, 2-வது மின்உற்பத்தி எந்திரங்களை சீரமைக்க 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் தமிழ்நாடு மின்சார வாரியம் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீவிபத்தில் சேதம் அடைந்த 1, 2-வது மின்உற்பத்தி எந்திரங்களை ரூ.264 கோடி செலவில் சீரமைப்பதற்கு அனுமதி அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுவுதல், கட்டுமானங்கள் புதுப்பித்தல், தண்ணீர் தெளிப்பு கருவிகள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இந்த பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாவும் கூறப்படுகிறது.