இளைஞரிடம் செயின் பறிக்க முயன்ற 3பேர் கைது : போலீசாருக்கு எஸ்பி பாராட்டு..!
தூத்துக்குடியில் இளைஞரிடம் செயின் பறிக்க முயன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நேதாஜிநகர் பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்மநபர்கள் மேற்படி இளைஞரை நிறுத்தி அவரிடம் பேசுவது போல அவர் அணிந்திருந்த தங்கசெயினை பறிக்க முயற்சித்துள்ளனர். இதனை சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று தப்பி ஓடி உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் சண்முகசுந்தரம் தலைமையிலான சிப்காட் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போது மீளவிட்டான் காட்டுப்பகுதிக்குள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பேர் ஓடுவதை பார்த்து மேற்படி போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெகநாதன் மகன் ஜெயஆனந்த் (21), முருகேசன் மகன் ஜான்சன் (24) மற்றும் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சோனிராஜா மகன் சண்முகவேல் (19) ஆகியோர் என்பதும் அந்த இளைஞரிடம் செல்போனை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
உடனடியாக காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேற்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழிப்பறியில் ஈடுபட்டவர்களை துரத்தி பிடித்து கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று நற்பணிசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.