தூத்துக்குடியில் அசன பண்டிகைக்கு சென்றவர் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு..!

தூத்துக்குடியில் அசன பண்டிகைக்கு சென்றவர் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு..!

தூத்துக்குடி காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட வீட்டு உபோயக பொருட்கள் விற்பனையாளர் சித்ரவதை செய்து படுகொலை செய்த உதவி ஆய்வாளருக்கு திருநெல்வேலி மாநில மனித உரிமை ஆணையம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி போல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (34). இவர் அப்பகுதியில் வீட்டு உபோயகபொருட்கள் விற்பனையாளராக பணி செய்து வந்தார். 2017ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அன்று அசன விருந்துக்காக சிதம்பர நகரில் உள்ள அபிஷேகநாதர் தேவாலயத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வரிசையில் நிற்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது அங்கு பணியிலிருந்த பெண் காவலர் ரூபாரோஸ்சிலின் தலையிட்டு பின்னர் பெண்காவலர் ரூபாரோஸ்சிலின் தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி தெற்கு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சப் இன்ஸ்பெக்டர் J.சந்திசெல்வி மற்றும் காவலர்கள் பாண்டியராஜனை காவல்நிலையத்திற்கு சட்ட விரோதமாக அழைத்து சென்று அவரை கடுமையாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். கடுமையான சித்ரவதைக்கு பின்னர் பெண் காவலர் ரூபாரோஸ்சிலின் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் 2017ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அதிகாலையில் காவல்துறையினர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளன‌ர். அப்போது அவர் இதய நோயால் இறந்து விட்டதாக காவல்துறையினர் தரப்பில் பாண்டியராஜனின் மனைவி சாந்தியிடம் தெரிவித்துள்ள‌னர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், நகர செயலாளர் தா.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து, நகரக்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கபட்ட பாண்டியராஜனின் மனைவி சாந்தியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காவல்துறியினரால் சித்ரவதை செய்யபட்டு படுகொலை செய்யபட்ட பாண்டியராஜணின் உடலை வாங்க மறுத்து உறவினரோடு சேர்ந்து போராட்டம் நடத்தினர். 

அதேபோல் சிபிஎம் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மையவாடி ஸ்டாப் அருகே நடைபெற்றது. பின்பு இது தொடர்பாக அப்போதைய மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது பாண்டியராஜன் கைது செய்யப்பட்டது குறித்து தனக்கு காவல்துறையால் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பாண்டியராஜன் காவல்நிலையத்தில் இருந்த போது இறந்ததாகவும், அவருக்கு இதய நோய் இல்லை எனவும் பாண்டியராஜனின் மனைவி சாந்தி தெரிவித்துள்ளார். பாதிக்கபட்ட சாந்தியுடன் வழக்கறிஞர் இ.சுப்புமுத்துராமலிங்கம் மாநில மனித உரிமை ஆனையத்தில் ஆஜரானார்.

மாநில மனித உரிமைகள் ஆணைய புலனாய்வு பிரிவு மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கைகளை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் மேற்கொள் காட்டினார். இவை இரண்டும் மனித உரிமை மீறல்களை உறுதிப்படுத்தின. பிரேத பரிசோதனையில் இறந்த 24 நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரின் உடல்களில் ஏற்பட்ட காயங்கள் கண்டறியப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்பே இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பாண்டியராஜன் உடலை பரிசோதித்து அவரை அனைத்து ஆடைகளையும் அகற்றியதாக நீதிபதி கூறினார். 

இந்த சமயத்தில் எஸ்.ஐ.சந்திசெல்வி அந்த அதிகாரிகளுடன் இருந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் மனித உரிமைகளை எஸ்.ஐ.சந்திசெல்வி மீறியதாக குற்றம் நிருபிக்கப்ட்டுள்ளது. மேலும் புகாரில் இருந்த மற்ற இரண்டு நபர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளார். ஒரு மாதத்திற்குள் பாண்டியராஜன் மனைவி சாந்திக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டுமென்றும் இத்தொகையை சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.சந்திசெல்வியிடமிருந்து மீட்டெடுக்கவும் மாநில அரசுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு காவல்நிலையத்திற்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட பாண்டியராஜனை கடுமையாக தாக்கி சித்ரவதை செய்து காவல்நிலையத்தில் படுகொலை செய்த உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டக்குழு வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.