தொடர் மழை: நெல்லை, தூத்துக்குடியில் 67 குளங்கள் நிரம்பின!

தொடர் மழை: நெல்லை, தூத்துக்குடியில் 67 குளங்கள் நிரம்பின!

தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 67 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்தாமிரபரணி, கோரம்பள்ளம் வடிநில கோட்டத்தில் மருதூர் கீழக்கால், மேலக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய 4 பிரதான கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

கீழ்தாமிரபரணி, கோரம்பள்ளம் வடிநில கோட்டத்தில் 107 குளங்கள் உள்ளன. இதில் மானாவாரி பகுதியில் உள்ள 4 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 53 குளங்கள் 60 முதல் 80 சதவீதம் வரையும், 50 குளங்கள் 30 முதல் 50 சதவீதம் வரையும் நிரம்பி இருக்கின்றன.

சடையநேரி கால்வாயில் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாயில் உள்ள 13 குளங்களும் 30 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. புத்தன் தருவை குளத்தில் தண்ணீர் விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் 409 குளங்கள் உள்ளன. இந்த குளங்களும் நிரம்பி வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் 

தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள 1,117 குளங்களில் 63 குளங்கள் முழுமையாக நிரம்பின. இதில் நெல்லை அருகே கரையிருப்பு பகுதியில் உள்ள பால்கட்டளை குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

இதுதவிர 18 குளங்கள் 99 சதவீதம் நிரம்பிய நிலையில் உள்ளன. 127 குளங்கள் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நிரம்பி இருக்கிறது. நெல்லை ஊரக பகுதிகளில் உள்ள 251 மானாவாரி குளங்கள் 1 முதல் 25 சதவீதம் வரை நிரம்பி உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 88 குளங்கள் நிரம்பாமல் உள்ளன.

தென்காசி: இதேபோல் தென்காசி மாவட்டத்தில் 25 சதவீதம் குளங்கள் நிரம்பி இருப்பதாகவும், மீதமுள்ள குளங்களுக்கு நீர்வரத்து உள்ளதாகவும், முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.