தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.86.94 கோடி திட்டப்பணிகள் ஆய்வு – இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி நேரில் பார்வை

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.86.94 கோடி மதிப்பிலான பூங்கா, நீச்சல்குளம், பாதாள சாக்கடை, நூலகம் மற்றும் ஓடை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.86.94 கோடி திட்டப்பணிகள் ஆய்வு – இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி நேரில் பார்வை

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.86.94 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி இன்று (15.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதலில் தெற்கு மண்டல ஹார்பர் கடற்கரையில் துறைமுக சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய பூங்காவை ஆய்வு செய்தார். தொடர்ந்து அய்யன் கோயில் பகுதியில் ரூ.1.63 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை பணிகளைப் பார்வையிட்டார்.

சிவந்தகுளம் பகுதியில் கல்வி நிதியிலிருந்து ரூ.2.99 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் முதல்வரின் படைப்பாக்கம் திட்ட கட்டுமானப் பணிகளையும், ரூ.65 லட்சம் மதிப்பிலான விலங்குகள் கருத்தடை மையத்திற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். முத்துநகர் வடக்கு கடற்கரை பகுதியில் ரூ.4.01 கோடி மதிப்பில் அமைக்கப்படும் நீச்சல்குளப் பணிகளும் பார்வையிடப்பட்டன.

மேலும் தருவைகுளம் உரக்கிடங்கு, ஸ்டெம்பார்க் வளாகத்தில் ரூ.3.06 கோடி மதிப்பிலான ஏரி மேம்பாட்டுத் திட்டம், அம்பேத்கர் நகர் மற்றும் P&T காலனி பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம், ரூ.9.85 கோடி மதிப்பிலான மாவட்ட நூலகக் கட்டிடம் ஆகிய பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.53.70 கோடி மதிப்பில் பக்கிள் ஓடை விரிவாக்கம் மற்றும் ரூ.3.05 கோடி மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகளையும் இயக்குநர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு விரைவாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.