தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11ஆம் தேதி வரையறுக்கப்பட்ட விடுமுறை : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் திருநாள் அன்று பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.
நடப்பு ஆண்டு 11.04.2025 அன்று (வெள்ளிக் கிழமை) பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் இந்நன்னாளில் குலதெய்வ வழிபாட்டிற்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு வழங்கக்கோரும் பட்சத்தில் எவ்வித மறுப்புமின்றி விடுப்பு வழங்கிட அனைத்துதுறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாளில் தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி/கல்லூரி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தவிர இதர பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு கோரும் பட்சத்தில் எவ்வித மறுப்புமின்றி விடுப்பு வழங்கிடவும் அறிவுறுத்தப்படுகிறது.