கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும்: வாலிபர் சங்கம் கோரிக்கை!

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் இ.சுரேஷ், மாவட்ட தலைவர் தினேஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாலையை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட லெனின் நகர்,ஸ்ரீராம் நகர், காமராஜ் நகர் ஆகிய பகுதியை சேர்ந்த மக்களும் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜூ நகர் அன்னை தெரசா நகர் மந்திதோப்பு குறுமலை என பல பகுதிகளைச் சேர்ந்த மக்களும் நகருக்குள் வந்து செல்வதற்கு இந்த சாலையே மிக முக்கியமானதாக உள்ளது.
ஆனால் இந்த சாலையானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப விரிவுபடுத்தப்படாமல் ஆரம்ப கட்டத்தில் உள்ளது போலவே உள்ளது. இதனால் இந்த சாலையில் தினசரி அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, காலை மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் என அதிக அளவு சாலையை வந்து செல்லும்போது நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த சாலையில் மட்டும் 5 திருமண மண்டபங்கள் உள்ளதால் விசேஷ தினங்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்து போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகமும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையும் இணைந்து எவ்வித தாமதமும் இல்லாமல் உடனடியாக கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவுபடுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குழு சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.