சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த எஸ்தோ ஜோ (எ) தர்மராஜ் மகன் நிர்மல்குமார்(42/25) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (12.12.2025) குற்றவாளி நிர்மல்குமாருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12,000 அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.