திருமணமான 26 நாட்களில் புதுமணப் பெண் தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
கழுகுமலையில் திருமணமான 26ம் தேதி புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சண்முகமுதலியார் தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை மகள் செல்வி (21). இவருக்கும் கழுகுமலை தியாகராஜர் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ் என்பவருக்கும் கடந்த டிச. 5ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பாண்டித்துரை ஜன. 1ஆம் தேதி கழுகுமலையிலிருந்து செல்வியை கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது, தான் நலமாக இருப்பதாக அவர் கூறினார்.
பின்னர், மாலையில் வீட்டின் மாடியிலுள்ள அறையில் செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டித்துரை அளித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து, பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 26ம் தேதி ஆன நிலையில் செல்வி தற்கொலை செய்துகொண்டதால் கோட்டாட்சியர் விசாரணை நடைபெறுகிறது.