அரசு விரைவு போக்குவரத்தில் தொழில்நுட்ப ஊழியர்களை பணியமர்த்த கோரிக்கை!!

அரசு விரைவு போக்குவரத்தில் தொழில்நுட்ப ஊழியர்களை பணியமர்த்த கோரிக்கை!!

அரசு விரைவு போக்குவரத்தில் தேவையான தொழில்நுட்ப ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்று சிஐடியு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில், அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) தூத்துக்குடி பணிமனை நிர்வாகிகள் கூட்டம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. பணிமனை தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மத்திய சங்க நிர்வாகி பிச்சைமணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் சுமார் 76 பேருந்துகள் 40 வழிதடங்களில் திருச்செந்தூர் உப பணிமனைகள் சேர்த்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிசேரி என பல மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. பணிமனையில் முறையான பாராமரிப்பு மற்றும் பழுதுநீக்க பணிகள் மேற்கொள்ள குறைந்தபட்சம் 45 தொழில்நுட்ப ஊழியர்கள் இருக்க வேண்டும். 

ஆனால் தற்போது 11 தொழில் நுட்ப பணியாளர்கள் தான் உள்ளனர். இதனால் பயணத்தடை, விபத்து, காலதாமதம், வருவாய் இழப்பு, பொதுமக்களுக்கு இடைஞ்சல், தொழில் அமைதி கெடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நிர்வாகத்திற்கு பலமுறை கடிதங்கள் கொடுத்தும் நேரடியாகவும், கோரிக்கைகள் வைத்தும் தீர்வு காணப்படவில்லை. 

ஆகவே நிர்வாகம் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு தேவையான தொழில்நுட்ப ஊழியர்களை பணியமர்த்தி பாதுகாப்பான பணி சூழலையும், விபத்து இல்லாத இயக்கத்தையும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். பணிமனையில் கடுமையான தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றாக்குறையை நிர்வாகம் மற்றும் அரசு உடனே போர்கால அடிப்படையில் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.