தூத்துக்குடியில் பள்ளி அருகே உள்ள எரிவாயு சிலிண்டர்களை அப்புறப்படுத்த கோரிக்கை!!

தூத்துக்குடியில் பள்ளி அருகே உள்ள எரிவாயு சிலிண்டர்களை அப்புறப்படுத்த கோரிக்கை!!

தூத்துக்குடியில்  பள்ளி அருகே உள்ள எரிவாயு சிலிண்டர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி  ஆரோக்கியபுரம் சேதுபாதை ரோட்டில் விவிடி நினைவு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 642 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 33 ஆசிரியர்களும் 3 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். 

பள்ளி வளாக சுற்றுச்சுவரினை அடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் என்ற எரிபொருள் நிரப்பும் நிறுவனம் உள்ளது. அதில், பள்ளி வளாக சுற்றுச்சுவரின் மிக அருகில் 30 முதல் 60 வரையிலான எரிவாயு உருளைகளை அடுக்கி வைத்துள்ளனர். இது பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி உள்ளது. 

மேலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள எரிவாயு உருளைகள் வெடித்து சிதறினால் பள்ளியின் கட்டிடங்கள் பாதிக்கப்படும்.அங்கு பயிலும் மாணவ மாணவியர் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே மாணவர்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.