தண்டவாளத்தில் சிக்கித் தவித்த பசு, கன்று மீட்பு : காவலருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு!

தண்டவாளத்தில் சிக்கித் தவித்த பசு, கன்று மீட்பு : காவலருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு!

தூத்துக்குடியில் ரயில் வரும் நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் சிக்கித் தவித்த பசு மற்றும் கன்றினை பத்திரமாக மீட்டு அதன் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கடந்த 7ஆம் தேதி மாலை இரண்டாம் ரயில்வே கேட்டில் ரயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் பசு மற்றும் அதன் கன்று குட்டி ஒன்று திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது. இதனையடுத்து அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் சுப்பையா துரிதமாக செயல்பட்டு அந்தப் பசு மற்றும் கன்றினை கேட்டிற்குள் ஓரமாகப் பிடித்து வைத்து ரயில் இன்ஜின் செல்லும் வரை நிறுத்தி வைத்து பாதுகாத்தார். 

இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். மேற்படி பசு மற்றும் கன்றின் உயிரை காத்த தலைமை காவலரின் மனிதாபிமான செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று தலைமை காவலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.