தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடப் பணிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றம்!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடப் பணிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றம்!!

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் 2025 - 26 ஆம் ஆண்டின் உத்தேச வரவு - செலவு அறிக்கையை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2025-2026 ஆம் ஆண்டின் உத்தேச வரவு செலவு அறிக்கை மற்றும் 2024-2025 ஆண்டின் திருத்திய வரவு செலவு அறிக்கையை மேயர் தாக்கல் செய்தார். 

இதில், நடப்பு ஆண்டிற்காக 2025-2026 வருவாய் நிதியில் ரூ.294.59 இலட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் எனவும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ. 233.23 இலட்சம் உபரியாக வருமானம் வரும் எனவும், கல்வி நிதியில் ரூ 217.47 இலட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் எனவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து எப்சிஐ குடோன் வரையில் உள்ள பக்கிள் ஓடையையை மண் கால்வாயை கான்கிரீட் கால்வாய் அமைப்பது, பக்கிள் ஓடை முடிவடடையும் பகுதியில் புதிதாக தடுப்புச் சுவர் அமைப்பது, அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடப் பணிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பாதாள சாக்கடை திட்டம் வைப்புத் தொகை திருத்தம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் 2025-2026 நிதிஆண்டில்  வடக்கு மண்டல பகுதியில் புதியதாக மகளிர் பூங்கா, நகர் பகுதியில் 5 இடங்களில் சிறிய விளையாட்டு மைதானங்கள், சிறுவர் சிறுமியர்க்கு நீச்சல் பயிற்சி நீச்சல் குளம், மின் சிக்கனத்திற்காக மாநகர் பகுதியில் சூரியஒளித் தகடுகள், நகரில் உள்ள 4 குளங்களை மறு சீரமைப்பு செய்வது, முதியோர்களுக்கு பூங்கா அமைப்பது, மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் விநியோகம், தொழில் முனைவோருக்கு பயிற்சி வகுப்புகள் உட்பட 41 திட்டங்களை மேயர் அறிவித்தார். 

கூட்டத்தில் துணை ஆணையர் சரவணகுமார், மாநகர துணை பொறியாளர் சரவணன், துணை ஆணையாளர்கள் உதவி பொறியாளர்கள் மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.