சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனு தள்ளுபடி!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனு தள்ளுபடி!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020ல் போலீசார் விசாரணையின்போது தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அப்ரூவராக மாறி அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க தயாராக இருப்பதாக மனு செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, அப்ரூவர் ஆவதற்கு சரியான காரணங்களை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, இந்த மனு நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீதர் ஆஜராகி, தான் அப்ரூவராக மாறுவதற்கான காரணங்கள் அடங்கிய 17 பக்க பதில் மனுவை தாக்கல் செய்தார். 

இதையடுத்து இவற்றை படித்துப் பார்த்து மனுவின் மீது உரிய முடிவெடுப்பதாகக் கூறி விசாரணையை ஆக. 4க்கு தள்ளி வைத்தார். இந்த நிலையில், இன்று ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.