திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: அரோகரா... கோஷம் முழங்க..லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (ஜூலை 7) காலை 6:30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவிலில் ஜூலை 1ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று (ஜூலை 7) அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று காலை 6.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு ஆராதனை நடந்த பின் அவற்றின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அதே நேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேக நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. கோவில் வளாகத்தில் 6ஆயிரமட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீஅம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மாசிலமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், பொன்னம்பல தேசிக சுவாமிகள், காசிவாசி முத்துக்குமார சுவாமித்தம்பிரான், சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிவஞான பாலய சுவாமிகள், இராமனந்த குமாரபுர சுவாமிகள், நியமானந்த சுவாமிகள், பாலமுருகனடிமை சுவாமிகள், பிச்சை சிவாச்சாரியார், கே.சுப்பிரமணியரு, ராஜா பட்டர் எ சந்திரசேகர் பட்டர், செலவம் பட்டர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
விழாவில் அமைச்சர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் / சிறப்பு அலுவலர் ப.மதுசூதன் ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சி.பழனி, பேரூராட்சிகளின் இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மா.பிரதீப்குமார், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ் ஹடிமணி, மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் அபிநவ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், உட்பட 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கூடுதல் ஆணையர் பொ. ஜெயராமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி எஸ்.முருகன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருக்கோயில் தக்கார் ஆர். அருள்முருகள், இணை ஆணையர் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்காக 15 இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.