ஏஞ்சல் சிலையில் இருந்து சொட்டு சொட்டாக விழும் நீர்... பக்தர்கள் பரவசம்..!!

ஏஞ்சல் சிலையில் இருந்து சொட்டு சொட்டாக விழும் நீர்... பக்தர்கள் பரவசம்..!!

தூத்துக்குடி அருகே தேவாலயத்தில் ஏஞ்சல் சிலையில் இருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக விழுவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து உட்பட்ட தருவைகுளம் பகுதியில் தூய மிக்கல் அதித்தூதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை அமைந்திருக்கிறது. இதில் வலது புறம் உள்ள ஏஞ்சல் சிலையில் இடது விரல்களில் இருந்து தண்ணீர் போன்ற ஒரு திரவம் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது. 

இந்த செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர் ஆலயத்திற்கு வந்து சிலையின் தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்துச் சென்றனர். இதனால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனையை நடத்தினர். தொடர்ந்து ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.