தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா: ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்..!

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா: ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்..!

தூத்துக்குடியில் 4வது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் ஜூன் 13ஆம் தேதி தொடங்குகிறது. 

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி ஜூன் 13ஆம் முதல் 15ஆம் தேதி வரை, 4வது நெய்தல் கலைத் திருவிழா தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் தொடங்கவுள்ளது.

நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மண் சார்ந்த கலைஞர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த விழா ஜூன் 13ஆம் முதல் 15ஆம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். 

கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

முதல் நாள் (ஜூன் 13) கலை நிகழ்ச்சி விவரம்: 

 

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி - மங்கல இசை, தொடக்க விழா, சமர் கலைக்குழு, அபிநயா நிருத்தாலய நடன பள்ளியின் பரதநாட்டியம், பால் ஜேக்கப்பின் ஃபங்கி போதி - சென்னை சங்கமத்தின்(2025 ), தொடக்க விழா இசை, சோல்டவுட் இசைக்குழு - ஒளி இசை இசைக்குழு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இரண்டாம் நாள் (ஜூன் 14) கலை நிகழ்ச்சி விவரம்: 

தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, வள்ளியூர் அபிநயகீதம் பல்சுவை கலை நிகழ்ச்சி, குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு, ஜமீன் கோடாங்கிப்பட்டி, கொங்கு பண்பாட்டு மையம் - பெருஞ்சலங்கையாட்டம், விழுப்புரம் மாலன் மாற்றுத்திறனாளிகள் மலர் கம்பம் குழு, காஞ்சிபுரம் விவேகானந்தா கிராமிய கலைக்குழு, சூப்பர் சிங்கர் ஷாம் விஷாலுடன் இணைந்து மெட்ராஸ் சந்திப்பு (ஜங்ஷன்) இசைக்குழு - ஒளி இசை இசைக்குழு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மூன்றாம் நாள் (ஜூன் 15) கலை நிகழ்ச்சி விவரம்: 

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி - மங்கல இசை மற்றும் நடனம், நெய்தல் கலைக்குழு - பல்வகை நாட்டுப்புற இசை, அந்தியூர் கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, தூத்துக்குடி உவரி களியல் கலைக்குழு, உருபாணர் - பண்டைய நாட்டுப்புற இசைக்கருவிகள் இசைக்குழு - நாட்டுப்புற பாடகர் மார்லி அந்தோணியின் நிகழ்ச்சி - நாட்டுப்புற மற்றும் ஒளி இசை இசைக்குழு - அந்தோணிதாசன் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.