பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது : இருசக்கர வாகனம் பறிமுதல்

சங்கரலிங்கபுரம் அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 19.02.2024 அன்று சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தையாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் மேற்படி பெண் மீது மிளகாய்பொடி தூவி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று அளித்த புகாரின் பேரில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குருவார்பட்டி சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்த குமார் மகன் ஜோசப் (23) என்பவர் செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா வழக்குப் பதிந்து, ஜோசப்பை கைது செய்து அவரிடம் இருந்த திருடப்பட்ட ரூபாய் 20ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மீட்டு வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.