தெருநாய் கடித்து மாணவ, மாணவியர் உள்பட 14 பேர் படுகாயம் : அரசு மருத்துவமனையில் அனுமதி!

தெருநாய் கடித்து மாணவ, மாணவியர் உள்பட 14 பேர் படுகாயம் : அரசு மருத்துவமனையில் அனுமதி!

திருச்செந்தூர் அருகே தெருநாய் துரத்தி துரத்தி கடித்ததில் பள்ளி மாணவ, மாணவியர் உள்பட 14 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைகிணறு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் கீழநாலுமூலைகிணறு மெயின்ரோட்டில் சென்ற பொதுமக்கள், வியாபாரி, பள்ளி மாணவ, மாணவியரை தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த தெருநாய் கடித்ததில் பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளையை சேர்ந்த சம்சா வியாபாரி திருநீலகண்டன் (வயது 72), பிச்சிவிளை பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நாகதினேஷ் (13), கீழநாலுமூலைகிணற்றில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி முத்துலட்சுமி (12), பாலமுருகன் (42), மணிஷ்சர்மா (10), சதானந்தா (5), அன்பு (40), ஆறுமுகபாண்டி (58), வள்ளியம்மாள் (50) உள்பட 14 பேரை நாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்தனர். 

மேலும் பலர் சாலையில் வேகமாக ஓடி தெருநாயிடம் இருந்து தப்பினர். இதில் படுகாயம் அடைந்த 14 பேரும் பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கீழநாலுமூலை கிணற்றில் தெரு நாய் கடித்து 14 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.