ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் : தூத்துக்குடி வழங்கறிஞர் சங்கம் மறுப்பு!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் : தூத்துக்குடி வழங்கறிஞர் சங்கம் மறுப்பு!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சிலர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. வாரியார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி மற்றும் கார் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரியிும் சில வழக்கறிஞர்கள் இன்று காலை விவிடி சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்ததாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. கடந்த 3.4.2018 அன்று நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் ஸ்டெர்லைட் ஆலைகள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக சட்ட வழக்கறிஞர்கள் கோர்ட்டில் வாதாடி வருகிறார்கள். தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் நீதிமன்ற நுழைவாயில் முன்பு மட்டுமே நடத்தப்படும். வெளியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சங்கத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் என்று வழக்கறிஞர்கள் வெளியே போராட்டம் நடத்தினால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பேட்டியின் போது சங்கத்தின் துணைத் தலைவர் சிவசங்கரன், செயலாளர் செல்வின், பொருளாளர் கணேசன், இணைச்செயலாளர் பாலகுமார், முன்னாள் தலைவர் தனசேகர் டேவிட், மூத்த வழக்கறிஞர் ஏடபுள்யூடி திலக் ஆகியோர் உடன் இருந்தனர்.