அரசு வேலைகள் வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் வேலை மற்றும் அரசு வேலைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காலனி தெருவை சேர்ந்த திரவியம் மகன் முத்தையா (30) என்பவரிடம் சாத்தான்குளம் ஆர்.சி வடக்கு தெருவை சேர்ந்த வீரமணி மகன் சுடலைமுத்து (48) என்பவர் அறிமுகமாகி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் வேலை மற்றும் அரசு வேலைகள் வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி மேற்படி முத்தையாவிடம் ரூ.2,50,000/-ம், அதேபோன்று சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர்களான தேவராஜ் என்பவரிடம் ரூ.6 லட்சமும், சுயம்பு என்பவரிடம் ரூ.6 லட்சமும், சுபாஷ் என்பவரிடம் ரூ.1,50,000/-ம் என மொத்தம் ரூ.16 லட்சம் பணத்தை வங்கி கணக்கு மூலமாகவும் மற்றும் ரொக்கமாகவும் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுக்கமாலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து மேற்படி முத்தையா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகாரளித்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து, மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முக சுந்தரம், ராஜ்குமார், மோகன் ஜோதி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு சுடலைமுத்துவை இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.