கடந்த 2 மாதங்களில் புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்ற 14 கடைகளுக்கு சீல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்ற 14 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பதுகாப்புத்துறை அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வகையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 14 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவுப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டு, அந்த கடைகள் அனைத்தும் 14 நாட்களுக்கு குறைவில்லாமல் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதில் மொத்தமாக ரூ.95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த அபராதத் தொகையை இணையதளம் மூலம் செலுத்திய பிறகு, மீண்டும் புகையிலை கலந்த உணவுபொருட்கள் விற்பனை செய்தால் கடை முன்னறிவிப்பு இன்றி மூடி சீல் வைக்கப்படும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு கடையை மீண்டும் திறக்க அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடைகளில் சோதனை நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.