தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட் தாமதம் : கூடுதல் மருத்துவரை நியமிக்க கோரிக்கை!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏறபடுவதால் கூடுதலாக மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் முத்து விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் செலவில் சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நவீனமான MRI Scan இயந்திரம் நிறுவப்பட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது
தற்போது, தினமும் பல நோயாளிகளுக்கு MRI ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், ஸ்கேன் முடிந்த பிறகும் அதற்கான மருத்துவ அறிக்கைகள் (Reports) அதிகபட்சமாக 10 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக தாமதமாக வழங்கப்படுகின்றன. இதனால் நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் பெரிதும் மனவேதனையை அனுபவிக்கின்றனர்..
இது குறித்து கேட்டபோது, மருத்துவர் இல்லாத காரணத்தால் அறிக்கையை எழுத முடியவில்லை என கூறப்படுகின்றது. MRI அறிக்கைகளை எழுதும் தகுதியுடைய மருத்துவர் கோவில்பட்டி தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தினமும் அதிகமான நோயாளிகள் வருகை தருவதையும், அவர்களுக்கு தரமான மற்றும் உடனடி சிகிச்சை தேவைப்படுவதையும் கருத்தில் கொண்டு
மேலும், இதுபோன்ற அவசர தேவைகளுக்காக கூடுதலாக மருத்துவர்களை நியமனம் செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைகள் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.