பவர்டில்லர், பவர்வீடர் வாங்க மானியம்: ஆட்சியர் தகவல்

பவர்டில்லர், பவர்வீடர் வாங்க மானியம்: ஆட்சியர் தகவல்

பவர்டில்லர் மற்றும் பவர்வீடர் வாங்க வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு, வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது.

நடப்பு 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களால் அறிவித்தவாறு தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 4000 எண்கள், விசைக் களையெடுக்கும் கருவி (பவர் வீடர்) 4000 எண்கள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சம், விசைக் களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் விசைக்களை எடுக்கும் கருவிகள் வாங்கிட 20 சதவிகிதம் கூடுதல் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. பொது பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் விசைக்களை எடுக்கும் கருவிக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையினை இணையவழி (RTGS/NEFT) அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவல்டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை உழவர் செயலியில் பதிவு செய்து மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவர் செயலியில் நிலப்பட்டா, சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறுது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ) தூத்துக்குடி (9443688032), கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), கோவில்பட்டி (9443276371) மற்றும் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ) திருச்செந்தூர் (8778426945) ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார்.