தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி பொதுநல வழக்கு..!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி பொதுநல வழக்கு..!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று துப்பாக்கி சூட்டில் பலியான மைனர் பெண்ணின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

தூத்துக்குடி மினி சகாயபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.அனிதா. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையினால், அப்பகுதி முழுவதும் மாசு அடைந்தது. சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டன. இந்தநிலையில் இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மீது போலீசார் கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் என்னுடையை 17 வயது மகள் ஸ்னோலின் உள்பட 13 பேர் குண்டு அடிப்பட்டு பரிதாபமாக இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. 

இதன்படி விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி அரசிடம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், இந்த துப்பாக்கு சூடு சம்பவத்தில் தொடர்புடைய மாவட்ட கலெக்டர், வருவாய் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இந்த அறிக்கையின்படி, அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்க வேண்டும். ஏற்கனவே, பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை போதுமானது. எனவே, கூடுதல் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று 5 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தோம். 

ஆனால், சட்டவிதிகளுக்கு முரணாக அரசு, எந்திரத்தனமாக செயல்பட்டு, அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கிறது. எனவே, அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ள காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று அப்போது தமிழ்நாடு அரசை வற்புறுத்தினார்.

அதனால், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குள் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் செய்துள்ள பரிந்துரைகள் அனைத்தையும் உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் ஆன்லைன் வாயிலாக ஆஜரானார். அவரது குரல் சரி வர கேட்காததால், நேரில் ஆஜராவதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 21-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.