தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறை அமலில் அதிரடி சோதனை..! ஆவணமின்றி ரூ.75 ஆயிரம் பறிமுதல் – தமிழக வெற்றி கழகத்தினர் வைத்திருந்த பரிசுப் பொருட்கள் கைப்பற்றல்..!

தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறை அமலில் அதிரடி சோதனை..! ஆவணமின்றி ரூ.75 ஆயிரம் பறிமுதல் – தமிழக வெற்றி கழகத்தினர் வைத்திருந்த பரிசுப் பொருட்கள் கைப்பற்றல்..!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.74,800 பணம் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் வைத்திருந்த ஏராளமான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மூன்று கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ஒரு பறக்கும் படை குழு நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறக்கும் படையின் இரண்டாவது குழு கூட்டுறவு இணைப்பதிவாளர் பொன்மாரி தலைமையில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் அன்னம்மாள் மகளிர் கல்லூரி அருகே வாகன சோதனை மேற்கொண்டது. அப்போது திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அந்த நபரிடம் எந்தவித ஆவணமும் இல்லாமல் ரூ.74,800 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது சரியான தகவல் அளிக்காததால், அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தூத்துக்குடி தாசில்தார் திருமணி ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல், தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் தமிழக வெற்றி கழக சின்னம் பொறிக்கப்பட்ட வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் கவனித்தனர். பின்னர் அருகிலிருந்த கட்டிடத்தில் சோதனை மேற்கொண்டபோது தமிழக வெற்றி கழகம் என அச்சிடப்பட்ட ஏராளமான மஞ்சப்பைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் விசில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றுக்கான எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.