புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி டிஜே பார்ட்டி ஏற்பாடு செய்தால் நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி ஏற்பாடு செய்தால் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருகின்ற 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதியின்றி யாராவது DJ பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் 2026ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான வியாழக்கிழமை அன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் பொது இடங்களில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து "பைக் ரேஸ்" செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் "வீலிங்" செய்வதும், அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்டுவதும், பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து மேற்கொண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் தூத்துக்குடி நகரின் முக்கிய இடங்களில் 360 டிகிரி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட இரண்டு காவல் ரோந்து வாகனமும், இரவு நேரங்களிலும் துல்லியமாக பார்க்கக்கூடிய 2 டிரோன் கேமராக்கள் மூலமும் காவல்துறையினர் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி 2500 காவல்துறையினர் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியமாக பொதுமக்கள் வழிபடும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.