அகில இந்திய ஹாக்கி: புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சாம்பியன்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கிய அகில இந்திய ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதின. இதில் 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான எம்.முகமது ரியாஸ் இறுதிப் போட்டியை தொடக்கி வைத்தார்.
முன்னதாக நடைபெற்ற 3ஆம் மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டியில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதியதில் 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் புது தில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியை வீழ்த்தி 3ஆம் இடத்தைப் பிடித்தது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே. ஆர். கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
முதல் பரிசு ரொக்கப்பணம் ரூ.2 லட்சம் - லட்சுமி அம்மாள் நினைவு கோப்பையை புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், 2 ஆம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பையை புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும், 3ஆம் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையை புது தில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், 4ஆம் பரிசாக கோப்பையை செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் பெற்றன.
மேலும், நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கோல் கீப்பர், சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர், முன் வரிசை வீரர், வளர்ந்து வரும் வீரர் மற்றும் போட்டியின் சிறந்த வீரர்களுக்கு தனி நபர் விருதுகளும் வழங்கப்பட்டது.
விழாவில், முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான எம். முகமது ரியாஸ்,
கே.ஆர். கல்வி நிறுவனங்களின் இயக்குநர் சண்முகவேல், கல்லூரி முதல்வர்கள் காளிதாச முருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்), மதிவண்ணன் (கே ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கே. ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.