புகழ்பெற்ற எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட ஆறு பேர் கைது: ரூபாய்.80 ஆயிரம் கள்ள நோட்டுகள் மற்றும் டாடா சுமோ பறிமுதல்!!

புகழ்பெற்ற எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட ஆறு பேர் கைது: ரூபாய்.80 ஆயிரம் கள்ள நோட்டுகள்  மற்றும் டாடா சுமோ பறிமுதல்!!

தென் மாவட்டத்தில் புகழ் பெற்றது எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. வாரந்தோறும் சனிக்கிழமை கூடும்

இந்த சந்தைக்கு ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  விவசாயிகளும் வியாபாரிகளும் ஆயிரக்கணக்கில் வருகை தருவது வழக்கம். 

சந்தை சனிக்கிழமை

கூடும் என்றாலும் வெள்ளிக்கிழமை மாலை முதலே விவசாயிகளும் வியாபாரிகளும் வந்து விடுவதால் சந்தை பரபரப்பாக காணப்படும். 

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி பொன் வேலன் என்பவரிடம் 3 நபர்கள் கூட்டாக வந்து 2 வெள்ளாடு வாங்கியுள்ளனர். விவசாயி சொன்ன விலைக்கு ஆடு வாங்கியவர்கள் எந்தவித பேரமும் பேசாமல் 19 ஆயிரம் ரூபாயை புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுக்களாக கொடுத்துள்ளனர். 13 ஆயிரம் ரூபாய்க்கு விலை போக வேண்டிய ஆடுகள் 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான போதிலும்

பணத்தை வாங்கிக் கொண்ட விவசாயி பொன் வேலனுக்கு திடீரென சந்தேகம் ஏற்படவே உஷார் அடைந்து ஆட்டுச் சந்தையின் நுழைவு வாயிலில் இருந்த  குத்தகைதாரர்களிடம் பணத்தைக் கொடுத்து பரிசோதித்துள்ளார். 

அந்த 500 ரூபாய் நோட்டுகளில் கலர் பிரைட்டாக வித்தியாசம் தெரியவே எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதிகாலை 4 மணிக்கு பாரா டூட்டியில் இருந்த போலீஸ் மாரியப்பன் என்பவர் துரிதமாக செயல்பட்டு உயர் அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.  டிஎஸ்பி அசோகன்,  போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, எஸ்.ஐ. மாதவ ராஜா அடங்கிய  போலீஸ் டீம் ஆட்டுச் சந்தைக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த  வெம்பக்கோட்டை மாரிமுத்து (35) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதைக் கண்ட கள்ள நோட்டு கும்பல் அங்கிருந்து நைசாக நழுவி தாங்கள் வந்திருந்த டாடா சுமோ காரில் தப்பிச் சென்றனர். பிடிபட்ட நபர்அளித்த தகவலின் பேரில் பின் தொடர்ந்து விரட்டி சென்ற எட்டயபுரம் தனிப்படை போலீஸ் டீம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, சாத்தூர், கோட்டைபட்டி, விஜய கரிசல் குளம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்த சந்திரன் (30), சுப்புராஜ் (40)அழகர்சாமி (40) முனியன் (36)காளிமுத்து j 36 )ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் மும்பையை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் மூலம் மதுரையில் கள்ள நோட்டுகளை வாங்கி இருப்பதும், கள்ள நோட்டுகளை தமிழ்நாடு முழுவதும் ஆடு, மாடு சந்தைகளில் புழக்கத்தில் விட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. 

பிடிபட்ட நபர்களிடம் இருந்து புத்தம் புது 500 ரூபாய் நோட்டுகள் 80 ஆயிரம் மற்றும் டாடா சுமோ வாகனத்தை பறிமுதல் செய்து எட்டயபுரம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.