ஆர்ப்பாட்டத்திற்கு வருகையில் விதிமுறை மீறல் – கடம்பூர் ராஜு வாகனம் சர்ச்சை..!

ஆர்ப்பாட்டத்திற்கு வருகையில் விதிமுறை மீறல் – கடம்பூர் ராஜு வாகனம் சர்ச்சை..!

தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வாகனம் போக்குவரத்து விதிகளை மீறி வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வருகை தந்தார். அவர் 3ம் மைல் பகுதியில் இருந்து நேராக வந்து, சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே வலது பக்கம் திரும்ப வேண்டும். இது தான் நடைமுறை., ஆனால் அவர் வந்த வாகனம் அவ்வாறு திரும்பாமல் இசக்கி அம்மன் கோவில் அருகிலுள்ள சிக்னலில் ஒரு வழிப்பாதையில் நேராக நுழைந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிரே வந்த கார், அவரது வாகனத்தை கண்டு திடீரென பிரேக் அடித்த நிலையில், அந்த காரின் பின்னால் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாகன ஓட்டிகளைக் சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடம்பூர் ராஜு ஆர்ப்பாட்ட மேடை அருகே சென்று இறங்கினார். ஆனால் அவர் வந்த கார் எதிர்திசையில் நின்றதால், அதன் முன்னாள் பிற வாகனங்கள் நீண்ட வரிசையாக காத்திருந்தன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, சாலை விதிகளை பின்பற்றுவது அனைத்து தரப்பினருக்கும் கட்டாயமான ஒன்று. விதிமீறல்கள் நிகழ்ந்தால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகுவதோடு, விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

சட்ட ஒழுங்கு குறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் முன்னாள் அமைச்சரே போக்குவரத்து சட்டத்தை மதிக்காமல் விதி மீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாமானிய மக்களுக்கு மட்டும்தான் போக்குவரத்து சட்டமா..? அரசியல்வாதிகளுக்கு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா..? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது...