ஆன்லைனில் ஆர்டர் செய்து பிரியாணி சாப்பிட்ட பெண் மரணம்: ஒரே வாரத்தில் 2 சம்பவங்கள்!

ஆன்லைனில் ஆர்டர் செய்து பிரியாணி சாப்பிட்ட பெண் மரணம்: ஒரே வாரத்தில் 2 சம்பவங்கள்!

கேரளாவில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட 20 வயது இளம்பெண் உயிரிழந்தார். 

முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் கோட்டயம் மருத்துவக் கல்லூரி செவிலியர் ஒருவர் கோழிக்கோடு உணவகத்தில் உணவு அருந்திய பின்னர் உயிரிழந்தார். ஒரே வாரத்தில் இரண்டு பேர் தரமற்ற உணவால் உயிரிழந்த நிலையில், மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீபார்வதி. இவரது சொந்த ஊரி பெரும்பாலா. இவர் டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிகப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், "இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட மருத்துவ அதிகாரியும் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரமற்ற உணவை விற்பனை செய்த உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஒரே வாரத்தில் இரண்டு உயிர்கள் பறிபோக ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு காரணமாக இருக்கலாம் என்ற நிலை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கடந்த மே 2022ல், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்த ஷவர்மாவால் மாணவி இறந்தார். அதன் பின்னர் நடந்த ஆய்வுகளில் அவர் சாப்பிட்ட ஷவர்மாவில் இருந்த கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷிகெல்லா பாக்டீரியா (Shigella bacteria) இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.