தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செப்டிக் டேங்க் குழாயை நேரடியாக கழிவு நீர் கால்வாயில் இணைத்த ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த முதல் நாளில் கனமழையுடன் பெய்து நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உடனுக்குடன் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது. பல இடங்களில் மழை நீர் தானாகவே கடலுக்கு சென்றது. இந்த நிலையில் 3ஆம் மைல் பகுதியில் மழைநீர் செல்லாமல் அப்படியே தேங்கியிருந்தது.
இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், பாலிடெக்னிக் எதிர்புறம் உள்ள பிரபல ஹோட்டல் இறைச்சி கழிவுகள் மேலும் செப்டிக் டேங்க் அமைக்காமல் நேரடியாக கழிவுநீர் கால்வாயில் விடப்பட்டதும், இதனால் சுமார் 30 அடி நீளத்துக்கு கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து மேயர் மற்றும் ஆணையர் உத்தரவின் பெயரில் மாநகர் நலஅலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின்படி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர் பணியாளர்கள் கழிவுநீர் கான் மீது போடப்பட்டுள்ள சிமெண்ட் பிளேட்டை அகற்றி பார்த்த போது மனித கழிவுகள், இறைச்சி கழிவுகள் அப்படியே தேங்கி பாறை போல உறைந்திருந்தது.
இது சுமார் 30 அடி நீளத்துக்கு இருந்ததால் எந்த ஒரு தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை இருந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக 30 அடி நீளத்துக்கு கழிவுநீர் கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமெண்ட் பிளேட்டை அகற்றி கானுக்குள் பாறை போல தேங்கியிருந்த கழிவுகளை சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு அகற்றினர்.
சுமார் ஒரு லாரிக்கு மேல் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. உடனடியாக தனியார் ஹோட்டல் நிறுவனத்திற்கு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல செயல்களில் ஈடுபட்டால் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளிலுள்ள தனியார் திருமண மண்டபங்கள், பிரபல ஹோட்டல்கள் மனித கழிவு இறைச்சி கழிவுகளை கழிவுநீர் கால்வாய் வழித்தடங்களில் விடக்கூடாது மீறி விடப்பட்டால் சீல் வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுபோல தூத்துக்குடி மாநகரில் பல திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் கழிவுகளை கால்வாய்களில்தான் விடப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.