லக்னோவில் இருந்து 2,000 கி.மீ பறந்து கோவில்பட்டி வந்த ‘யூசுப்’ புறா – இந்திய அளவில் புதிய சாதனை

லக்னோவில் இருந்து 2,000 கி.மீ பறந்து கோவில்பட்டி வந்த ‘யூசுப்’ புறா – இந்திய அளவில் புதிய சாதனை

உத்தரப் பிரதேசத்தில் இருந்து பறக்கவிடப்பட்ட பந்தயப் புறா ஒன்று, சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து கோவில்பட்டியை வந்தடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. 

திசையன்விளையைச் சேர்ந்த ராயல் பந்தயப் புறாக்கள் சங்கம் சார்பில் லக்னோவில் இருந்து கோவில்பட்டிக்கு இந்தப் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த புறாக்கள் பங்கேற்றன. கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்த செய்யது அகமது இப்ராஹிம் என்பவரது 2 வயதுப் புறாவான 'யூசுப்' இதில் பங்கேற்றது.

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி லக்னோவில் இருந்து புறாக்கள் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து 31 நாட்கள் பயணம் செய்த 'யூசுப்' புறா, மே 2-ஆம் தேதி நண்பகல் கோவில்பட்டியில் உள்ள தனது இருப்பிடத்திற்கு வந்தடைந்தது.

இது குறித்துச் செய்யது அகமது இப்ராஹிம் கூறுகையில், "பொதுவாகப் புறாக்கள் முதல் நாளில் 750 கி.மீ வரை பறக்கும், பிறகு வேகம் குறையும். இடையில் ஓய்வெடுத்துப் பயணிக்கும். எனது புறா 2,000 கி.மீ தொலைவைக் கடந்து இந்திய அளவில் இதுவரை நிகழாத சாதனையைப் படைத்துள்ளது" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

செய்யது அகமது இப்ராஹிம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2019-இல் இவரது புறாக்கள் 500, 750, 1000 கி.மீ பந்தயங்களில் முதலிடம் பிடித்து காரைப் பரிசாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.